ஞாயிறு, 26 மார்ச், 2017

மழையுமானாய்....

புயலுக்கு பின் அமைதியோ
முன் அமைதியோ என
பதறத் தேவையின்றி
மனம் ஒரு நிலையில்
உன் அருகில்...

நெடு நாள் கனவொன்று
இன்று மெய்ப்பட
என் அருகே நீ
எல்லையில் நின்று
அமைதி காக்கிறாய்

எழுத எழுத என் பக்கங்களும்
நீள்கின்றன
என் கதைக்குள் நான்
பாத்திரங்களோடு உலவிவர
நேரம் தந்து என் அடுத்தத்
தலை நிமிரலுக்காக காத்திருக்கிறாய்

நீ கடிகாரம் பார்ப்பதை
என் கவனத்துக்கு வராமல் மறைக்கிறாய்

காற்று நிற்காமல் மெல்லியதாக
வீசுகிறது

சுற்றிலும் தண்ணீர் அலையில்
தளும்பியபடி இருளை
அரவணைக்கிறது

என் காகிதத்துக்கு வெளிச்சம் போதாமல்
நான் நிமிர
உன் கைத்தொலை பேசி
விளக்கால் ஒளியூட்டுகிறாய்

நான் மறுபடியும் எழுத ஆரம்பிக்க
உனக்குள்ளே ஏதோ பேசிக்கொண்டே
முடிவுகள் செய்து கொள்கிறாய்

ஏறக்குறைய ஒரு மணி நேரம்
என் கதையும் ஒரு உருவுக்கு வந்து விட்டது

உனக்கான என் மனப்பிரதிமைகளும்
பெருமாற்றங்களுக்கு
உள்ளாயின

அடியோடு புரட்டிப்போட்டு
உழுத நிலமாய்
வானம் பார்த்தபடி மழைக்காக
என் மனம்

சொற்ப  நேரத்தில் வீட்டை அடைய
எழுதி முடி
உணவு தயார் செய்கிறேன்
என்று அடுக்களை புகுந்த போது- நீ
மழையுமானாய்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக