முன்பில் வழி விழைந்து
அன்றில் அகம் இழந்து
ஐந்தும் வெளி நழுவ
நானல்லா யாவற்றிலும்
என்னைத் தேடினேன்
நூல் பல கற்று
சொல் பல கேட்டு
பயிற்சி பல செய்து
நானல்லாவற்றை
புரிந்து கொண்டேன்
அகத்தில்
நான் எனும் பிம்பம்
நிதர்சனம் காட்டும்
பொய் விளக்க பிரதிமை என்னும்
மெய் விளக்கம் பதிவேற
புறத்தில்
காண்பதெல்லாம்
கனாவாக
இன்ப துன்பம் வலுவிழந்து
மனமெனும் மாய சுழற்சி
நித்யப் பிரவாகமானது
சுற்றிய சுழல் அகல
நிழல் வெறுமை
நிறைந்து நின்று
நிகழில் நிலைத்தது
இவ்வழிக்கு குழப்பமே
நன்றாயிருந்ததே
என்று எண்ண துவங்கிய
சில காலங்களில்
அகமென்ற உள்வெளியே
அற்ற அந்த சூனியத்தில்
நிகழ்வுகள்
தெள்ளத் தெளிவாக
சந்திக்க இலகுவாக
ஆகியிருந்ததை
மிக லேசாகிப் போயிருந்த
மன இயக்கம் விளக்கியது
எங்கோ ஓர் மூலையில்
உருவாகி முடிவில்லா
சூனியத்தின் பயணத்தில்
சதா பிரவகிக்கும்
தானியங்கி மனதை
தள்ளி நின்று பார்க்கும்
நானெனும் பொய் பிரதிமை
அவ்வப்போது வளர்ந்தும்
பின் தன்னை உணர்ந்தும்
யோகமும் ஞானமும்
ஒன்றாகி ஓளிர்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக